இந்தியாவில் தனி விமானங்களில் பயணிக்கும் வழக்கம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் தனி விமானங்களில் பயணிக்கும் வழக்கம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் ஆடம்பரத்தைச் சித்தரிப்பதற்காக தனி விமான பயணங்களைக் காட்டுவதுண்டு. இந்தியாவில் அது, நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமாகியுள்ளது. தனி விமானத்தில் பயணிக்கும் வாழ்க்கை முறை, தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. தனி விமானப் பயணங்கள் குறித்து, ஏசியன் ஸ்கை குரூப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல், இதை பறைசாற்றுகிறது. அதன்படி, சீனாவுடன் போட்டிபோடும் அளவுக்கு, மிகப்பெரிய தனி விமானச் சந்தையாகவே இந்தியா உருவெடுத்துள்ளது.
2020 முதல் 2024ஆம் ஆண்டுகள் இடையே, இந்தியாவில் தனி விமானப் பயணங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டங்களில், மாதந்தோறும், 2,400 விமானச் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டின் முதல் காலாண்டில், ஆசியா - பசிபிக் பகுதியில், அதிக எண்ணிக்கையில் விமானப் போக்குவரத்து நடந்த 10 வழித்தடங்களில், 5 வழித்தடங்கள், இந்தியாவில்தான் உள்ளன. இந்த ஐந்தில் நான்கு பயணங்கள், டெல்லி, பெங்களூரு, ஜாம் நகர், அஹமதாபாத் நகரங்களில் இருந்து மும்பையை நோக்கி நடந்துள்ளன.