இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு பல்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் குழு ஒன்று திரட்டிய தரவுகளின்படி ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு ஐஐடி வளாகங்களில் மொத்தம் 65 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 12க்கு மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி வளாகங்களில் தற்கொலை செய்துகொள்கின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு ஐஐடிகளில் படிக்கும் 28 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கான்பூர் ஐஐடியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
காரக்பூர் ஐஐடியில் ஏழு மாணவர்கள். டெல்லி, ரூர்க்கி, குவஹாத்தி ஐஐடியில் தலா மூன்று தற்கொலைகளும் நடந்துள்ளன. வாரணாசி, தனபாத் மற்றும் பாம்பே ஐஐடியில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்வி அழுத்தம், தனிமை, போட்டி, சாதி மற்றும் மொழிரீதியான பாகுபாடுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமே தற்கொலைக்கு தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு உயர்மட்ட 'பணிக்குழு' ஒன்றை அமைத்துள்ளது.
மாணவர்களின் மனநலப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வளாகங்களில் நிலவும் அழுத்தமான சூழலைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஆராயவும் இந்தக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மனநலம் என்பது 'வாழ்வுரிமையின்' ஒரு பகுதி என்பதை பல தீர்ப்புகளில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐஐடி முன்னாள் மாணவர்கள் குழு, இந்த உயிரிழப்புகளுக்கு ஐஐடி நிர்வாகங்களின், உயர் மட்ட அளவில் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.