இந்தியா

’டிஜிட்டல் கரன்சியை மத்திய அரசே வெளியிடும்’-பலரின் கவனத்தை ஈர்த்த நிதியமைச்சரின் அறிவிப்பு

சங்கீதா

டிஜிட்டல் கரன்சியை மத்திய அரசே வெளியிடும் என்று பட்ஜெட் அறிவிப்பின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம்.

சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி என்ற பெயரில் மெய்நிகர் பணத்தை ரிசர்வ் வங்கி வெளியிடும் என நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். தாள் வடிவில் தற்போது நாம் பயன்படுத்தும் பணத்திற்கு நிகரான மதிப்புள்ள, அதே நேரம் காகித வடிவில் இல்லாத பணமே மெய்நிகர் பணம் அதாவது டிஜிட்டல் கரன்சி எனப்படுகிறது. தற்போது உலகெங்கும் வேகமாக பிரபலமாகி வரும் பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுடன் டிஜிட்டல் கரன்சியை ஒப்பிடமுடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கிரிப்டோ கரன்சிக்கள் தேசப்பாதுகாப்புக்கும், அரசின் நிதி நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் என ரிசர்வ் வங்கி கூறி வரும் நிலையில், டிஜிட்டல் கரன்சி களமிறங்க உள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ‌பல்வேறு தரப்பினரும் சங்கிலித்தொடர் போல் தொடர்ச்சியாக பதிவிடும் தரவுகள் அடங்கிய மின்னணு தளமே பிளாக் செயின் எனப்படுகிறது.

இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்பட உள்ளது. ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள இந்த டிஜிட்டல் கரன்சியை தற்போதுள்ள பணத்தாள்களுக்கு மாற்றாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவ்வங்கியின் துணை ஆளுநர் ரபிசங்கர் கூறியுள்ளார். தற்போதுள்ள தாள் வடிவிலான பணப் பயன்பாட்டில் கறுப்புப் பணம் போன்ற பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயங்கள் உள்ளன. இதுபோன்ற பல பாதகங்களை களையும் வகையில் டிஜிட்டல் கரன்சி இருக்கும் எனக் கூறப்படுகிறது. டிஜிட்டல் கரன்சியை சுவீடன் போன்ற 9 நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. மேலும் 14 நாடுகள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளன. இந்நிலையில் இந்தியாவும் அப்பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.