இந்தியாவில் முதியோர் மக்கள்தொகை 20 ஆண்டுகளில் இருமடங்காகும் நிலையில், அதைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. 800 காப்பகங்கள், பகல் நேர பராமரிப்பு மையங்கள், ‘ஜீவன்’ செயலி, ‘சதாயு’ டேஷ்போர்டு போன்ற முயற்சிகள் மூலம் பராமரிப்பு சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தியாவில் முதியோரின் மக்கள்தொகை மிக வேகமாக இரட்டிப்பாகிவரும் நிலையில், அதனைச் சமாளிக்கவும், புதிய பொருளாதார வாய்ப்பாக மாற்றவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தற்போது நாட்டில் 16 முதல் 17 கோடி முதியோர் உள்ளதாகவும், அடுத்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்றும் சமூக நீதி அமைச்சகச் செயலர் சுதன்ஷ் பாந்த் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 800 காப்பகங்கள் இயங்கிவரும் நிலையில், 'பகல் நேர பராமரிப்பு மையங்களை' உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் சேவைகளை ஒரே இடத்தில் பெற 'ஜீவன்' செயலியும், பராமரிப்பாளர்களை எளிதில் கண்டறிய 'சதாயு' டேஷ்போர்டும் தொடங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, முதியோருக்கான வீடுகள் மற்றும் பராமரிப்புச் சந்தை 2030க்குள் சுமார் 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உயர்ந்துவரும் ஆயுட்காலத்துக்கு ஏற்ப, தரமான முதியோர் பராமரிப்பு உள்கட்டமைப்புகளை உடனடியாக மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.