சென்னையைச் சேர்ந்த 24 வயது ஐ.டி ஊழியர் ஒருவர், "நான் உடம்பால் சோர்வாக இல்லை, மனதால் சோர்வாக இருக்கிறேன்" என்கிறார். இது ஒரு தனிநபரின் குரல் அல்ல; இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களின் எதார்த்த நிலை. உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சியூட்டும் தகவலின்படி, இந்தியாவில் அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளால், வரும் இரண்டாயிரத்து 30ஆம் ஆண்டுக்குள் ஏற்படப்போகும் பொருளாதார இழப்பு மட்டும் 1 புள்ளி பூஜ்ஜியம் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மனநல ஆய்வின்படி, ஒவ்வொரு 10 இந்தியர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு மனநலப் பிரச்சினையுடன் வாழ்ந்து வருகிறார். இதில் கொடுமை என்னவென்றால், மனநோயால் பாதிக்கப்படுபவர்களில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான். பெரும்பாலானோருக்கு 19 அல்லது 20 வயதிலேயே இந்தப் பாதிப்புகள் தொடங்கிவிடுகின்றன. சமூக ஊடகங்களில் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும், கல்வி மற்றும் வேலை அழுத்தமுமே இதற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
என்.சி.இ.ஆர்.டி (NCERT) மற்றும் யுனிசெஃப் ஆய்வுகளின்படி, பள்ளி மாணவர்களில் 11 சதவீதம் பேர் கடுமையான பதற்றத்தாலும், 43 சதவீதம் பேர் மனநிலை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 43 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் உள்ள நிலையில், அவர்களுக்கான மனநல சிகிச்சை மையங்கள் இன்னும் போதிய அளவில் இல்லை.
மேலும், மனநல மருத்துவரை அணுகுவதையே அவமானமாகப் பார்க்கும் சமூகப் பார்வையின் காரணமாக, பலர் தங்களுக்குள் இருக்கும் வலியை வெளியே சொல்வதில்லை. இந்தியாவின் அடுத்த பெரிய நெருக்கடி பொருளாதாரம் அல்ல, மனநலமாகத்தான் இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை உணர்ந்து அரசும் சமூகமும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்