India's arms exports reached high ai generate
இந்தியா

வரலாறு காணாத உச்சம்.. ஆயுத ஏற்றுமதியில் அசத்தும் இந்தியா.. எந்தெந்த நாடுகள் தெரியுமா?

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Praveen Joshva L

இந்தியா ஒருகாலத்தில் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி மட்டுமே செய்துவந்த நிலையில், தற்போது ஆயுத ஏற்றுமதி நாடாகவும் உயர்ந்துள்ளது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தியா வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 38,424 கோடி ரூபாயை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 23,622 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஒரே ஆண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 62.66% என அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியா சொந்தமாக தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள், தேஜஸ் போர் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், வெடிமருந்துகள், அதிநவீன ரேடார்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவை 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முன்னர் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஆயுத ஏற்றுமதி செய்த நிலையில், தற்போது இந்த துறையில் தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 128-லிருந்து 145 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் தனது ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அதேநேரம், உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.