இந்தியா

சத்தீஸ்கரைக் கலக்கும் வாள் சாமியார்

webteam

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் சாமியார் ஒருவர், தனது வாளால் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்த முடியும் என்கிறார். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா பகுதியைச் சேர்ந்தவர் புலேஸ்வரி தேவி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது மந்திர வாளுக்கு குணப்படுத்த முடியாத நோய்களைக் கூட குணப்படுத்தும் வலிமை இருப்பதாகக் கூறுகிறார். கண்களில் பார்வைக் குறைபாடு இருப்பதாக இவரிடம் வந்த இளம்பெண் ஒருவரின் கண்ணுக்குள் வாளைச் செலுத்தி மந்திரங்களை ஜெபிக்கிறார். இந்த சிகிச்சையால் நல்ல பலன் கிடைத்துள்ளதாக அந்த பெண் கூறுகிறார். உடலின் பல்வேறு பாகங்களில் ஏற்படும் நோய்களை இந்த வாளை வைத்து குணப்படுத்த முடியும் என்று கூறும் புலேஸ்வரி, வாரத்தில் 2 நாட்கள் இந்த சேவையை அளிப்பதாகவும் கூறுகிறார். 
புலேஸ்வரியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கோரியா பகுதி ஊராட்சிமன்ற உறுப்பினர் ராம் பைஜான், இதுபோன்ற செயல்பாடுகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் சூனியக்காரர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின் அடிப்படையில், கடந்த 2000-2012 இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் சூனியம், மந்திரம் தொடர்பாக 2,097 கொலைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் இது போன்ற மந்திரவாதிகளிடம் மயங்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை.