எல்லையில் தங்களது பகுதியில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
எல்லைப் பிரச்னை குறித்து சீன ஊடகங்களே எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், முதல்முறையாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் லீ இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார். "சிக்கிம் மாநில எல்லையில் எங்களது பகுதி என்று கூறிக்கொள்ளும் தோக்லாம் பகுதியில் இந்திய படைகள் ஊடுருவியிருக்கிறது. இதனை இந்திய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற வேண்டும்’ என வாங் லீ வலியுறுத்தியுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக இந்தியா சார்பில் அஜித் தோவல் பங்கேற்கிறார். அப்போது, எல்லைப் பிரச்னை குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் இந்தியப்படைகள் ஊடுருவி இருப்பதாக கூறியுள்ளார். பூட்டான் பகுதியான தோக்லாம் பகுதியில் சீனா படைகள் அத்துமீறி சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அங்கு குவிக்கப்பட்டுள்ள இருநாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.