Bittu Tabhi ani
இந்தியா

ட்ரெண்டு ஆன பிட்டு டாபி.. உலக அரங்கில் கிடைத்த அங்கீகாரம்.. அதிரடியாக வந்த தரமான ஆஃபர்!

இணையத்தில் வைரலான ’பிட்டு டாபி’ என அழைக்கப்படும் இளைஞருக்கு, உலக அரங்கில் தரமான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பயோரா பகுதியில் அமைந்திருக்கிறது அஜ்னர் ஆறு. குப்பைகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் நிரம்பி வழிந்துக் கிடக்கும் இந்த ஆறு, அழியும் தருவாயில் இருந்தது. ஆனால், அந்த ஆற்றுக்கு 20 வயதான இளைஞர்தான், மீண்டும் புத்துயிர் கொடுத்து காப்பாற்றினார்.

Bittu Tabhi

’பிட்டு டாபி’ என்ற அழைக்கப்படும் B.Sc பட்டம் படித்த சுரேந்திர சௌத்ரி என்ற இளைஞர், அஜ்னர் ஆற்றங்கரையோரமாக இருந்த குப்பைகளை, தனது சொந்த முயற்சியின் மூலம் நீக்கியிருந்தார். ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, நண்பர்கள் குப்பை அகற்றும் பணியில் இருந்து விலகிவிட்டாலும், தொடர்ச்சியாக அதில் ஈடுபட்டார்.

ஒரு துளி அளவுக்குக்கூட நீச்சல் அடிக்க தெரியாதபோதும், ஆபத்தான ஆற்றில் இறங்கி குப்பைகளை அகற்றியதால், அவருக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், விடப்பிடியாக இருந்த அவர், தனது சொந்த பணமான 30 ஆயிரம் ரூபாயின் மூலம், உபகரணங்களை வாங்கி ஆற்றைச் சுத்தப்படுத்தினார். இறுதியாக, குப்பை இருந்தபோது ஆறு எவ்வாறு இருந்தது, அகற்றிய பிறகு எவ்வாறு மாறியது என்ற Before-After வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Bittu Tabhi

அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானதையடுத்து, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு, இளைஞரைப் பாராட்டியிருந்தார். அதன்பிறகே பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த இளைஞர், நெட்டிசன்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறார். இந்த இளைஞரை அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அழைத்து, பொன்னாடை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்திருந்தார்.

மேலும், அந்த இளைஞரை.. நமது ’லிட்டில் பிட்டு' என்று கூறி.. அதாவது நம்முடைய செல்லமான குழந்தை என்று தெரிவித்து, அன்பை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு பல்வேறு தரப்பட்ட அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்று வரும் இவர், தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Bittu Tabhi

அதாவது, நெதர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அமைப்பான 'தி ஓஷன் கிளீன்அப்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான போயன் ஸ்லாட் சமூக வலைதளம் மூலம், பிட்டு டாபிக்கு பொதுவான அழைப்பு விடுத்து, ’எங்களுடன் வந்து வேலை செய்யுங்கள்’ என்று வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திலிருந்து இவருக்கு நேரடி அழைப்பும் வந்துள்ளது. இதுதொடர்பான பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.