லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக இருந்தாலும், அது இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்ற அளவுக்கு நாடு சென்றுவிட்டது. அதேநேரத்தில், லஞ்சப் புகார்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் அதிகாரிகள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. லஞ்சம் பெறுவது தொடர்பாகப் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் இருக்கும் நிலையில், இந்திய மாணவர் ஒருவர், இலஞ்சம் தொடர்பான சம்பவங்களைப் புகாரளிக்க உதவும் 'Bribes.fyi' என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். பி.டெக் மாணவரான ஆர்யன் நிஷாத்தால் கடந்த ஜூலை 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இலவச இணையதளமான இதில், அரசு அலுவலகங்களில் தன்னிடம் இலஞ்சம் கேட்கப்பட்ட சம்பவங்களையும், பணம் கொடுக்க மறுத்த குறிப்புகளையும் குடிமக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
குறைந்த நாட்களிலேயே வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தளத்தில், காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து, வருவாய்/நிலப் பதிவேடுகள், கடவுச்சீட்டு, மாநகராட்சி, சரக்கு மற்றும் சேவை வரி, மின்சார வாரியம், வருமான வரி மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் லஞ்சம் குறித்த புகார்களைப் பதிவு செய்யலாம்.
மேலும் இந்த தளத்தில் ஆகஸ்ட் 17 நிலவரப்படி, 258 நகரங்களில் 646 முறை இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கேட்கப்பட்டதாகப் புகாரளித்தவர்களில் 37% பேர் பணம் கொடுக்க மறுத்தபோதிலும், தங்களது வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில், காவல்துறை அதிகபட்சமாக 349 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் 100 வழக்குகளையும், வருவாய்/நிலப் பதிவேடுகள் துறை 69 வழக்குகளையும், கடவுச்சீட்டு அலுவலகம் 43 வழக்குகளையும், மாநகராட்சிகள் 30 வழக்குகளையும் பதிவு செய்துள்ளன. மேலும், இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மாநிலங்களில், கர்நாடகாவில் அதிகபட்சமாக 138 லஞ்ச வழக்குகள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 91 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 75 வழக்குகளும் பதிவாகியுள்ளன.