இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்க எண்ணிக்கையில் அமெரிக்க டாலர், யூரோவை முந்தி உலக கவனத்தை ஈர்த்துள்ளன. RBI துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மு கூறியதன்படி, இந்தியாவில் 176 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன; அமெரிக்காவில் 56 பில்லியன் டாலர், ஐரோப்பாவில் 30 பில்லியன் யூரோ மட்டுமே. குறைந்த மதிப்பிலான நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்படுவது இதற்குக் காரணமாக விளக்கப்படுகிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையில் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர் மற்றும் யூரோவை முந்தியுள்ளது. RBI அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஷிரிஷ் சந்திர முர்மு, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற Global Cash Management 2026 மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் சுமார் 176 பில்லியன் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, அமெரிக்காவில் சுமார் 56 பில்லியன் டாலர் நோட்டுகளும், ஐரோப்பாவில் சுமார் 30 பில்லியன் யூரோ நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. அதாவது, எண்ணிக்கையில் இந்திய ரூபாய் நோட்டுகள் அமெரிக்க டாலர் நோட்டுகளைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதற்கு இந்தியாவில் குறைந்த மதிப்பிலான நோட்டுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் ஒரு முக்கிய காரணம் என முர்மு விளக்கினார்.
இந்தியாவில் பல்வேறு மதிப்புகளில் 176 பில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் ரூ.500 நோட்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரூ.100 நோட்டுகளும் கணிசமான அளவில் உள்ளன. அதேவேளையில், ரூ.2,000 நோட்டுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புழக்கத்தில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 28 முதல் 30 பில்லியன் நோட்டுகள் அச்சிடப்பட்டு, பழைய நோட்டுகளில் சுமார் 21 பில்லியன் திரும்பப் பெறப்படுவதாக முர்மு கூறினார்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்தாலும், பணத்தின் பயன்பாடு குறையவில்லை. இதை ‘Cash Paradox’ என RBI குறிப்பிடுகிறது. 2026 ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ.42.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மூத்த குடிமக்கள், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள், மோசடி அச்சம் மற்றும் தேர்தல் கால பணத் தேவை உள்ளிட்ட காரணங்களால் ரொக்கப் பயன்பாடு தொடர்ந்து அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், எதிர்கால பணத்தேவையை கணிப்பதும், நோட்டுகள் அச்சிடுதல் மற்றும் விநியோகத்தை திட்டமிடுவதும் RBI-க்கு சவாலாகி வருகிறது.