ரயில் பயணிகளிடம் இனி ரயில் கட்டணம் தவிர ரயில் நிலைய பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகை வசூலிக்கப்பட உள்ளது. இத்தகவலை ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 ஆயிரம் பெரிய ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், அதில் 700 முதல் 1050 ரயில்நிலையங்களில் ரயில் கட்டணத்தில் சிறிது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இக்கட்டணம் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக வசூலிக்கபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த கட்டண உயர்வு 50 நவீனப்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.
இது குறித்து என்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறும் போது “ 2021 ஆண்டு இறுதிக்குள் 50 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அதன் காரணமாக இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. நிச்சயம் இது மக்களுக்கு சுமையாக இருக்காது” என்றார்.
இது குறித்து வினோத் குமார் யாதவ் கூறும் போது “ 7000 ரயில் நிலையங்களில் 10 முதல் 15 சதவிகித ரயில் நிலையங்களில் மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.” என்றார். முன்னதாக ரயில் நிலையங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வேதுறை, அதற்கான கட்டணத்தை அவர்களே வசூலிப்பார்கள் எனக் கூறிய நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.