இந்தியா

வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த இந்திய ரயில்கள்

வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த இந்திய ரயில்கள்

webteam

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்தில் அனைத்து ரயில்களும் வந்தடைந்தன.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பெரும்பாலும் ரயில்கள் நிரம்பி வழிந்தபடி தான் செல்லும். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொரோனா பொது முடக்கத்தால் ரயில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக இன்றைய தினத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் சரியான நேரத்திற்கு நிலையங்களைச் சென்றடைந்திருப்பாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று இயக்கப்பட்ட 201 ரயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு, சரியான நேரத்தில் குறிப்பிட்ட நிலையங்களைச் சென்றடைந்துள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டவையாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 23ஆம் தேதி 99.54% ரயில்கள் சரியான நேரத்தில் வந்திருக்கின்றன. அன்றைய தினம் ஒரே ஒரு ரயில் மட்டும் தாமதமாக வந்திருக்கிறது. ஆனால் இன்று அனைத்து ரயில்களும் சரியான நேரத்தைப் பின்பற்றியுள்ளன.