இந்தியா

ரூ.3,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றியது கடற்படை!

webteam

சர்வதேச சந்தையில் ரூ.3000 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப் பொருள்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்திய கடற்படை கப்பல் சுவர்ணா, அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகிக்கும் வகையில் சென்றுக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டது. அப்போது அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணைக்காக, அந்தப் படகு அருகில் உள்ள கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிடிபட்ட போதைப் பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மிகப்பெரிய அளவு - விலை மதிப்புள்ள பறிமுதல் நடவடிக்கை மட்டுமல்ல; மக்ராவ் கடற்கரையிலிருந்து இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருள்களை கடத்தி செல்லும் சட்டவிரோத வழித்தடத்தை சீர்குலைக்கும் செயலிலும் இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

போதைப் பொருள்களால் மனிதர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், போதைப் பொருள்களின் வர்த்தகத்தால் தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் குற்றநடவடிக்கைகளும் அதிகரிக்கிறது' என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.