இந்தியா

கேரளாவில் வழக்கத்தைவிட கூடுதலாக மழை - இந்திய வானிலை ஆய்வு மையம்

Sinekadhara

கேரளாவில் இந்த மாதம் மட்டும் 135 விழுக்காடு வரை கூடுதலாக மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த 16 ஆம் தேதி மழைபெய்யத் தொடங்கிய நிலையில், அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கேற்றபடி அதீத கனமழை பெய்ததில், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிலச்சரிவு, பெருவெள்ளம் உள்பட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் தற்போது வரை கேரளாவில் மட்டும் 135 விழுக்காடு கூடுதலாக மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 192 புள்ளி 7 மில்லி மீட்டர் மட்டுமே மழை பதிவாகும் என்றும், ஆனால், தற்போதோ 453 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.