செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
மகாராஷ்டிராவில் 19 வயதான குணால் சந்த்குடேவும் அவரது பெற்றோரும் iPhone-க்கான EMI செலுத்துவது தொடர்பான குடும்பப் பிரச்னையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. EMI செலுத்த முடியாமல் குணால் என்ற இளைஞர் பெற்றோரிடம் பணம் கேட்டதாகவும், தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு நடந்த சம்பவம் மூவரின் உயிரையும் பலி வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதற்கான காரணங்களில் சிலவற்றை பார்க்கலாம். இந்தியாவில் மாத குடும்ப வருமானம் ரூ.75,000-க்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள் ஐந்து கோடிக்கும் குறைவாக உள்ள நிலையில், சராசரியாக ரூ.75,000 மதிப்புள்ள தங்களின் 'கனவு ஸ்மார்ட்போன்’ பல குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமையாக இருக்கலாம். இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையாகும் iPhone-களில் குறைந்தது 42 சதவீதம் EMI மூலம் வாங்கப்படும் என மதிப்பிடப்படுகிறது.
நகரங்களைத் தாண்டி சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் விலையுயர்ந்த போன்களை கடனில் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. உடனடி பணப்பரிவர்த்தனைக்கு பதிலாக மாதத் தவணைகளை முன்னிறுத்தும் சில்லறை நிதியுதவி, சாதனங்களின் உண்மையான விலையை மறைத்து ‘எளிதில் வாங்கலாம்’ என்ற தோற்றத்தை உருவாக்குகிறது.
ஸ்மார்ட்போன் கடன்களின் சராசரி காலம் 10 மாதங்களாக உள்ள நிலையில், iPhone-களுக்கான சராசரி தவணைக் காலம் 17.2 மாதங்களாக நீள்கிறது. இதனால் வருமானத்துக்கும் நுகர்வுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிறது. குறிப்பாக Gen-Z இளைஞர்களிடம் iPhone சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கமும், நண்பர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தமும் இந்த நுகர்வை மேலும் தூண்டுகின்றன. இதனால், ‘ஆசை’ எனத் தொடங்குவது சில குடும்பங்களுக்கு விரிக்கப்படும் கடன் வலையாக மாறும் அபாயம் அதிகரித்து வருகிறது.