இமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சி செய்யும்போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த அமெரிக்கர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டனர்.
பேரி ராபர்ட்ஸ் என்ற அந்த அமெரிக்கர், இமாச்சலப் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் பகுதியில் பாரா கிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக 15000 அடி உயரத்தில் இருந்த பாறை ஒன்றில் அவர் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவரைக் காணவில்லை என மற்ற பயிற்சியாளர்கள் உட்பட பலரும் தேடியுள்ளனர். தரைவழியாக அவரை தேடிக் கண்டுபிடிக்கமுடியாத சூழலில், அவரை கண்டுபிடிக்க ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அப்போது பாறையில் சிக்கி படுகாயமடைந்திருந்த அவரை, இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்.