இந்தியா

வீடியோ: காஷ்மீரில் முழங்கால் அளவு உறைபனியில் கர்ப்பிணியை சுமந்துசென்ற ராணுவ வீரர்கள்

JustinDurai

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டு, முழங்கால் அளவு உறை பனியில் சுமார் 4 மணி நேரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பனி மூடிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணியின் உறவினர்கள் செய்வதறியாது நின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் ஷப்னம் பேகத்தை கட்டிலில் படுக்க வைத்து முழங்கால் அளவு பனியில் சுமந்து சென்றனர்.
சுமார் 4 மணி நேரம் உறை பனியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோவை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.