indian army jawan
indian army jawan twitter
இந்தியா

காஷ்மீர்: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் மாயம்; பயங்கரவாதிகளால் கடத்தலா? - குடும்பத்தினர் அதிர்ச்சி!

Prakash J

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி. இந்திய ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி அஜதலில் இருந்து மளிகைப் பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்குச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்புகொண்டனர். ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தைத் தேடியுள்ளனர்.

அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித்தின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக் கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அவர் கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகச் சந்தேகித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஜாவித்தை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜாவித்தின் தாயார் வெளியிட்ட வீடியோவில், "தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். என் மகனை விடுதலை செய்யுங்கள். என் ஜாவித்தை விடுதலை செய்யுங்கள். நான் அவரை ராணுவத்தில் வேலை செய்ய விடமாட்டேன். ஆனால், தயவுசெய்து அவரை விடுவிக்கவும்" என கண்ணீர் வடித்தபடியே கோரிக்கை வைத்துள்ளார்.

ஜாவித்தின் தந்தை முகமது அயூப் வானி, "அவரை சிலர் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றுள்ளனர். அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து என் மகனை விடுவிக்கவும்" என்றார்.

ஏற்கனவே இந்தப் பகுதியில் விடுமுறையில் வந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஜாவித் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.