Farmers Protest  web
இந்தியா

’அமெரிக்காவிலிருந்து வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..’ டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.!

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் உள்ளூர் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

PT WEB

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிலிருந்து பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதை எதிர்த்து, சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என அவர்கள் எச்சரித்து, மத்திய அரசு விவசாயிகளுடன் ஆலோசனை இல்லாமல் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.

இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தலைநகர் டெல்லியில் விவசாய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ஏற்பாடு செய்திருந்த டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, இந்தியா

கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு ஜூன் 22-ம் தேதி இந்தியா வந்துள்ள நிலையில், இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என மத்திய அரசு கூறினாலும், எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போராட்டத்தில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கூறுகையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) விவசாயம் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

Farmers protest

மத்திய அரசு அமெரிக்காவுடன் தடையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் ஆலோசனையை தொடங்கிவிட்டது, இரு நாட்களில் இந்த ஒப்பந்தம் இறுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் இந்திய விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

அந்த வகையில் இந்தியா முழுவதும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்வது அனுமதிக்க முடியாது, அப்படி அனுமதித்தால் இந்திய உற்பத்தி பொருட்களை சந்தை படுத்த முடியாத நிலை ஏற்படும்.

Farmers protest

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு அம்சங்களிலும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற செய்யக்கூடாது என்பதை என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். விவசாயிகளை வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், இது குறித்து மத்திய அமைச்சர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக நேரம் கேட்டுள்ளோம். ஏற்கனவே இது குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினோம். இருப்பினும் மேற்கு ஆசியா போர் பதற்றம் காரணமாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது.

உலகளாவிய முதலாளிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது, இதற்கு பிரதமர் மோடியும் அனுமதிக்க கூடாது. இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்கு முன்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் . ஆனால், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை குறித்து விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தையும் மத்திய அரசு கேட்கவில்லை. நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு வெளிப்படையாக விவசாயிகள் தொடர்பான நலம் சார்ந்த கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காததன் காரணமாகவும் தற்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.