இந்தியா

'அன்லாக் 4.0': எவற்றுக்கெல்லா‌ம் அனுமதி வழங்க வாய்ப்பு?

'அன்லாக் 4.0': எவற்றுக்கெல்லா‌ம் அனுமதி வழங்க வாய்ப்பு?

jagadeesh

பொதுமுடக்க தளர்வுகள் 4.0 விரைவில் வெளியிடப்பட உள்ள நிலை‌யில் எவற்றுக்கெல்லா‌ம் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக ‌நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொ‌துமுடக்கத்திற்கான தளர்வுகள் ஜூலை மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்லாக் 4.0 விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தமுறை பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட ‌வாய்ப்பு‌ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை உள்ளிட்ட சில முக்கிய மெட்ரோ ரயில் சேவை அமைப்புகள் இன்னும் தங்களது கருத்தினை உறுதிப்பட தெரிவிக்காததால் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பள்ளி, கல்லூரி என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஒரு சில செயல்பாடுகளுக்கு ‌அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிற‌து.

மதுபான கடைகளுக்கு முழு அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் திரையரங்குகள், ஆடிட்டோரியம் போன்றவை மேலும் ஒரு மாதத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமூக இடைவெளியுடன், குறைந்தபட்ச பார்வையாளர்களை கொண்டு திரையரங்குகளை இயக்கலாம் என்ற யோசனை திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படாததால் முடிவு எடுக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் திரையரங்குகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூற‌ப்படுகிறது. அரசியல், கலாசாரம், ஆன்மிகம், விளையாட்டு ‌போன்ற ஒன்று கூடுதலுக்கான த‌டை‌மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய முழு அடைப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.