மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் SKO எனப்படும் உயர்தர மண்ணெண்ணெய்யை ஒதுக்கீடு செய்ய, பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்குப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு மண்ணெண்ணெய்யை விரைவாக விநியோகிப்பதற்கு ஏதுவாக, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் விதிமுறைகளைத் தளர்த்துவதாக இந்திய அரசு அறிவித்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு, சமையல் மற்றும் எரிப்பதற்குத் தேவையான மண்ணெண்ணெய்யை, தற்காலிக அடிப்படையில் விநியோகிக்க இந்த நடவடிக்கைகள் வழிவகுக்கும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மார்ச் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய்யின் விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக மண்ணெண்ணெய்யை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் SKO எனப்படும் உயர்தர மண்ணெண்ணெய்யை ஒதுக்கீடு செய்ய, பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்குப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தற்போது திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, நியமிக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக மண்ணெண்ணெய்யை சேமித்து வீடுகளுக்கு விநியோகிக்க அனுமதிக்கப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையமும் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய்யை இருப்பு வைக்கலாம் என்றும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் ஒரு மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்கள் அடையாளம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு, 2002ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகளின் சில பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதன் மூலம், மண்ணெண்ணெய்யைக் கையாளும் விற்பனையாளர்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்படுகிறது. தற்போது மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், மண்ணெண்ணெய் சேமிப்பு, கொண்டு செல்லுதல் மற்றும் இறுதிக்கட்ட விநியோகத்தை விரைவுபடுத்துவதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எரிபொருள் கிடைப்பதைப் பாதிக்கும் தற்போதைய உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், வீடுகளுக்கு அத்தியாவசிய எரிசக்தி ஆதாரங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே உள்ள எரிபொருள் விநியோக வலையமைப்பின் மூலம் விரைவான விநியோகத்தை எளிதாக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களது தற்போதைய சில்லறை விற்பனை நிலையங்களில் மண்ணெண்ணெய்யை இருப்பு வைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், நியமிக்கப்பட்ட அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தொடர்ந்து பொருந்தும். தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன, மேலும் 60 நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை செல்லுபடியாகும்.