இந்தியா

இந்தியா வரவுள்ள ட்ரம்புக்கு காந்தியின் சுயசரிதை பரிசு !

jagadeesh

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மகாத்மா காந்தியின் சுயசரிதையும் ராட்டினமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

வரும் 24ஆம் தேதி தனது மனைவி மெலனியாவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார். அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். 30 நிமிடங்கள் நடைபெறும் இந்நிகழ்வின் போது சபர்மதி நதிக்கரையை பார்வையிடும் ட்ரம்புக்கு ஆசிரம நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

மகாத்மா காந்தியின் சுயசரிதையான MY LIFE, MY MESSAGE புத்தகமும், கதர் ஆடை தயாரிக்க பயன்படும் ராட்டினமும் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்புக்கு பரிசாக வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். அதன்படி டொனால்ட் ட்ரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியா வருகிறார்.

இந்த வருகையின்போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களைச் சுற்றிப்பார்க்க உள்ளனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.