இந்தியாவில் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் ஸ்மார்ட்போன் விநியோகம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10% சரிந்துள்ளது. ரேம், மெமரி சிப் விலை நான்கு மடங்கு உயர்ந்து உற்பத்திச் செலவு, போன் விலை 15% உயர்ந்தது. ரூ.15,000-க்கு குறைவான பட்ஜெட் போன்கள் 45% வீழ்ச்சி கண்டதால், சீன பிராண்டுகள் 2020க்குப் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.
செய்தியாளர் - M.மீரா
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை, இந்த ஆண்டு ஏப்ரல்–ஜூன் காலாண்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான Counterpoint Research வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஸ்மார்ட்போன்களின் விநியோகம் சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவாகக் கருதப்படுகிறது.
வீழ்ச்சிக்கான காரணம் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் Ram மற்றும் மெமரி சிப்களின் விலை, 2025 செப்டம்பர் முதல் சுமார் 4மடங்கு வரை உயர்ந்துள்ளதால் ஸ்மார்ட்போன் உற்பத்திச் செலவு அதிகரித்து, போன்களின் சராசரி விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ரூ.15,000-க்கும் குறைவான விலையிலான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விநியோகம் சுமார் 45 சதவீதம் வரை சரிந்துள்ளது. இந்தச் சரிவின் விளைவாக, இந்தியாவில் சீன பிராண்டுகளின் ஸ்மார்ட் போன்கள் 2020-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது.
மேலும் தவணை திட்டங்கள் அதிகரித்துள்ளதால், விலை உயர்ந்த பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான வாங்கும் ஆர்வம் மக்களிடையே தொடர்ந்து நிலைத்திருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ஈரான் போர் எதிரொலியாக சிப் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் இதனால் கணினி, ஸ்மார்ட்போன், AI சர்வர், EV விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து .ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களின் விலையும் அதிகமாகவே இருக்கும் நிலை உருவாகும். இதனால் , இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்களிலும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை அழுத்தத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான கவுன்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, 2026-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விநியோகம் மொத்தத்தில் 13 சதவீதம் வரை குறையக்கூடும் என்று கூறியுள்ளது.