இந்தியா

இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிக கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர்

Veeramani

இந்தியாவின் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “ இந்தியாவில் மருத்துமனைகள் நிரம்பியுள்ளன, இறப்புகள் அதிகமாக உள்ளது. அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு, முதல் ஆண்டைவிடவும் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்றும் எச்சரித்தார். இந்தியாவின் கொரோனா பாதிப்புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவி வருவதாகவும், ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நடமாடும் கள மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம் என்றும் அதானோம் கூறினார்.

நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவிட்-19 ஏற்கெனவே உலகெங்கிலும் 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பறித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்குதல் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதுதான் தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்