இந்தியாவிலுள்ள பத்து பெரிய மாநிலங்களே மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்பதை தீர்மானிக்கின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 282 மக்களவைத் தொகுதிகளில் வென்று, 30 ஆண்டுகளாக எந்தக் கட்சியும் செய்யாத சாதனையை பாஜக புரிந்தது. அதற்குமுன், 30 ஆண்டுகளாக எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லாத நிலையில், பாஜகவின் இந்த வெற்றி அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இத்தனை இடங்களை பாஜக வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெரும்பான்மையான இடத்தை அக்கட்சி வென்றதுதான்.
10 பெரிய மாநிலங்கள் (2014 முடிவுகள்) :
மாநிலத்தின் பெயர்கள் மொத்த தொகுதிகள் பாஜக வென்ற தொகுதிகள்
உத்தரப் பிரதேசம் 80 71
மகாராஷ்டிரா 48 23
மேற்கு வங்காளம் 42 02
பீகார் 40 22
தமிழ்நாடு 39 01
மத்தியப் பிரதேசம் 29 27
கர்நாடகா 28 17
குஜராத் 26 26
ஆந்திரப் பிரதேசம் 25 02
ராஜஸ்தான் 25 25
இந்தப் பத்து மாநிலங்களிலும் தற்போது பாஜக அதே பலத்துடன் இருக்கிறதா ? அல்லது பலம் அதிகரித்துள்ளதா ?, குறைந்துள்ளதா ? என்ற கேள்விக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடை கிடைக்கும். ஆனால் இந்த மாநிலங்களில் இடைக்காலத்தில் நடைபெற்ற சில தேர்தல்களை பார்க்கும்போது, உத்தரப்பிரதேசத்தின் மக்களவை இடைத்தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் தொகுதியிலேயே பாஜக தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் மக்களவை இடைத்தேர்தலிலும், அதேசமயம் சட்டமன்ற தேர்தலிலும் தோற்று ஆட்சியை இழந்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது. ஆனால் கர்நாடக சட்டமன்ற தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவான இடங்களையே (99) வென்றது. ஆந்திரப்பிரதேசத்தில் கூட்டணியாக இருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பிரிந்து சென்றுவிட்டது. மத்தியப் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்துள்ளது. பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதனால் வரும் மக்களைத் தேர்தலில் இந்த 10 மாநிலங்களிலும் பல மாற்றங்கள் நடைபெறலாம்.