இந்தியா

மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2.82 லட்சமாக உயர்வு

மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2.82 லட்சமாக உயர்வு

newspt

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் அதிகரித்து 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. எனினும், கடந்த இரு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்ததால் 3-வது அலை குறையத் தொடங்கியதாக பலரும் எண்ண ஆரம்பித்தனர். ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் பொங்கல் மற்றும் மகர சங்ராந்தி விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறிவந்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி நிலவரப்படி , தினசரி பாதிப்பு 2.71 லட்சமாகவும், 16-ம் தேதி 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. 3-வது அலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.

மகாராஷ்டிராவில் 39,207 பேரும், கேரளாவில் 28,481 பேரும், தமிழகத்தில் 23,888 பேரும், குஜராத்தில் 17,119 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 14,701 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 79 லட்சத்து 1 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையும் 8,961 ஆக உயர்ந்துள்ளது.

 ‘‘நாடு முழுவதும் 441 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,87,202 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 76,35,229 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 158 கோடியே 88 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.