இந்தியா

ஆக.7-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி- வானிலை மையம் விடுத்த அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று இந்திய வானிலை மையம் அறிவித்த தகவலில் `கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மிக கனமழை இரண்டு நாட்களுக்கு தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மிக கனமழை தொடர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையமும் கூறியுள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.