இந்தியா

‘எங்களது உள்நாட்டு விவகாரத்தில் கருத்துகூறுவது தேவையற்றது’ - கனடாவுக்கு இந்தியா கண்டனம்

Veeramani

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து தொடர்பாக “ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பான போது இவை தேவையற்றவை” என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.  கனட பிரதமர் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா “இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு தலைவர்களின் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக இராஜதந்திர உரையாடல்கள் தவறாக சித்தரிக்கப்படாமலிருப்பதும் சிறந்தது” என கூறியுள்ளார்.

முன்னதாக குரு நானக்கின் பிறந்தநாளுக்காக ஆன்லைனில் பேசிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி போராட்டம் குறித்தும் பேசினார். அதில், இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. நாங்கள் அவர்களின் குடும்பத்தினரை பற்றியும், நண்பர்களை பற்றியும் கவலை கொள்கிறோம். அது தான் உங்களது மனநிலையாகவும் இருக்கும். எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். டெல்லி போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது