இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையும் அது உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக முகாம் அமைப்பது, பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ’ஜங்கன்’(Zangnan) என்பது அருணாச்சல பிரதேசத்தின் சீனப் பெயராக சூட்டியுள்ள நிலையில், அம்மாநிலத்தைத் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோரி வருகிறது. தனது கூற்றை ஆதரிப்பதற்காக, தவாங்கில் இரண்டாவது மிக முக்கியமான திபெத்திய பௌத்த மடாலயம் இருப்பதையும், ஆறாவது தலாய் லாமா அங்கு பிறந்ததையும் சீனா உதாரணங்களாகக் காட்டுகிறது.
தவிர, அம்மாநிலத்தில் உள்ள பல இடங்களுக்கு தனது சொந்த மாண்டரின் மொழியில் போலிப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களையும் வெளியிட்டு வருகிறது. சீனாவின் இத்தகைய செயலுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் தொடர் வரம்பு மீறலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 27 முக்கிய இடங்கள் அருணாச்சல பிரதேச வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய சர்வே அமைப்பு (Survey of India) மூலம் அம்மாநிலத்தின் முக்கிய இடங்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன், அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தில், மொத்தம் 27 இடங்கள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக இந்தியா-சீனா மோதல் முனைகளாக அறியப்படும் லோங் ஜூ (Long Ju), மாஜா (Maja), பிசா (Bisa) ஆகிய கிராமங்களும், தசோ லா (Dzo La), ரிசா லா (Riza La), புக்கூர் லா (Pukur La) மற்றும் தாக் லா (Thag La) ஆகிய மலைக் கணவாய்களும் (Passes), சம்போ சரோவர் (Sambho Sarovar) என்னும் உயர் உயர ஏரி, ஜெயராம்பூர் தளவாட மையம், ஜஸ்வந்த் கார் (Jaswant Garh) நினைவுச் சின்னம் மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளும் 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் தரநிலைப் பெயர்களுடன் முறையாக அடையாளப்படுத்தி மத்திய அரசு சேர்த்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின்பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.