இந்தியா

இலங்கையில் சீனாவின் மின்னுற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்றியது இந்தியா

Veeramani

இலங்கையில் சீனா செயல்படுத்தவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தானது.

பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க கொழும்பு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள 3 தீவுகளில் மின்னுற்பத்தி நிலையங்களை இந்தியா அமைத்து தருவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க சீனாவிற்கு கடந்த ஆண்டு இலங்கை அனுமதி கொடுத்திருந்தது. ஆனால் தமிழகத்தின் எல்லையிலிருந்து வெறும் 50 கிலோ மீட்டர் தொலைவில் சீனா காலூன்றுவது தங்கள் பாதுகாப்புக்கு அபாயம் என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்திருந்தது.



மேலும் மின்னுற்பத்தி திட்டங்களை தாமே செயல்படுத்தி தரவும் இந்தியா முன்வந்தது. இந்த யோசனையை இலங்கை ஏற்றுக்கொண்ட நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முன்னதாக கொழும்புவில் பேசிய சீன தூதர், தங்களுக்கு வழங்கப்படவிருந்த வாய்ப்பு இந்தியாவுக்கு தரப்பட்டது குறித்து இலங்கையை விமர்சித்திருந்தார். இதனால் இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

கொழும்பு அருகே போர்ட் சிட்டியில் சீனாவுக்கு நில உரிமை வழங்கும் திட்டத்தையும் இலங்கை ஏற்கனவே திரும்பப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.