ஜஸ்டின் ட்ரூடோ, அரிந்தம் பக்சி
ஜஸ்டின் ட்ரூடோ, அரிந்தம் பக்சி file image
இந்தியா

‘பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக கனடா திகழ்கிறது’ - இந்திய வெளியுறவுத்துறை பகிரங்க குற்றச்சாட்டு

Prakash J

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் விளக்கம் அளித்த கனடா பிரதமர்!

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டது. இப்படி, இரு நாடுகளுக்கு இடையே மோதல் கடுமையாக வெடித்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்தார்.

அவர், ’இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். இதன் காரணமாகவே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இந்தியாவைத் தூண்டிவிடுவது அல்லது பிரச்னையை அதிகரிப்பது எங்கள் எண்ணம் இல்லை. அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்’ என அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா கனடா

இந்தியாவில் வசிக்கும் கனடா மக்களுக்கு எச்சரிக்கை!

இந்த நிலையில், இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ’நாடு முழுவதும் இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டினர் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள். அங்கே பாதுகாப்பு சார்ந்து சில கவலைகள் உள்ளன அல்லது அந்த நிலைமை விரைவாக மாறக்கூடும். எல்லா நேரங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அங்குள்ள உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து பாருங்கள். அதில் அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா அரசு தனது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியர்களை மிரட்டிய கனடா காலிஸ்தான் அமைப்பு!

இந்தச் சூழலில்தான், ’கனடாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று இந்திய மக்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

அதேநேரத்தில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியது. மத்திய அரசு வழங்கிய அந்த அறிவுறுத்தலில், ’இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தது. இந்தியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய இந்தப் பயண எச்சரிக்கையை நிராகரித்த கனடா, தங்கள் நாடு, உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது’ எனவும் தெரிவித்தது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி

கனடா குடிமக்களுக்கு விசா நிறுத்தம்!

இந்த நிலையில், கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு விசாவை, இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்திவைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, சர்வதேச அமைப்பில் தேடப்படுபவராகவும் காலிஸ்தான் ஆதரவாளராகவும் தீவிரவாதியாகவும் கண்டறியப்படக்கூடிய சுக்தூல் சிங், கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

”தீவிரவாதிகளின் புகலிடம் கனடா”

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் எந்த தகவலையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அரிந்தம் பக்சி

கனடாவில் இருந்து குற்றச்செயலில் ஈடுபடுவோர் பற்றி அந்நாட்டு அரசுக்கு ஆதாரம் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனடா தனது நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் அந்நாட்டு அரசு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கனடா - இந்தியா குறித்த முழு வரலாற்றுத் தகவலையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.