இந்தியா

வருமான வரிக் கணக்கு - இன்றே கடைசி நாள் - தவறினால் யார், யாருக்கு எவ்வளவு அபராதம்?

ச. முத்துகிருஷ்ணன்

2021 - 2022 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். முந்தைய வருடங்களைப் போல கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

நீட்டிப்பு சாத்தியமா?

கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஜூலை 26-ம் தேதி வரை ரூ.3.4. கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த 26-ம் தேதி மட்டும் ரூ.30 லட்சம் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்படும் - எச்சரிக்கை:

வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், சில காரணங்களால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாத போது, மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்கு தனியாக வரியுடன் செலுத்த வேண்டும். தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வருமான வரித்துறையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலையும் அனுப்பி வருகிறது.

யார் யாருக்கு எவ்வளவு அபராதம்?

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு அபராதத்தொகை ரூ.1000 விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் அதிகம் இருந்தால் அபராதத்தொகை ரூ.5000 விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு அபராதத்தொகை இல்லை. அவர்களுக்கு வயது வித்தியாசமின்றி வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.