இந்தியா

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை

webteam

சென்னை, ஹைதராபாத், மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

செட்டிநாடு குழுமம் என்பது சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு குழுமம். அந்த செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெறுகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை குறித்த முழுமையான தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.