இந்தியா

பாஜகவில் இணைந்தவருக்கு இளைஞர் காங்கிரஸில் பதவி!- கட்சி மாறியதுகூட தெரியாத ம.பி. சலசலப்பு

JustinDurai
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தவர், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த மார்ச் மாதம் அக்கட்சியிலிருந்து விலகியதோடு பாஜகவிலும் இணைந்துவிட்டார். அப்போது. அவரது ஆதரவாளரான ஹர்ஷித் சிங்காயும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில், ஜபல்பூரின் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவிக்கு ஹர்ஷித் சிங்காய் 12 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த செய்தியறிந்த ஹர்ஷித் சிங்காய் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஹர்ஷித் சிங்காய் கூறும்போது, ‘‘காங்கிரஸில் இருந்து மார்ச் மாதமே நான் விலகிவிட்டேன். இப்போது இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரியது. 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் மனு செய்திருந்தேன். காங்கிரஸில் இருந்து விலகியபின் எனது மனுவை ரத்து செய்யுமாறு மாநில காங்கிரஸிடம் கோரினேன். காங்கிரஸில் தேர்தல் இப்படித்தான் நடக்கிறது’’ என்றார்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் ஹர்ஷித் சிங்காயின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. 'ஹர்ஷித் சிங்காய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை' என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.