இந்தியா

23வயது பெண்ணை மணமுடித்த 13 வயது சிறுவன்

rajakannan

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவன் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பரகால் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்குதான் திருமணம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சனிகன்னூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளின் மகள்தான் மணப்பெண். மணமகனான அந்தச் சிறுவனின் தாய்க்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. அவர் கிட்டத்தட்ட மரணம் எட்டும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், தன்னுடைய மரணத்திற்கு பிறகு தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள பொறுப்பான பெண் தேவை என்பதால் இப்படியொரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் வீட்டில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி இந்தத் திருமணம் நடந்துள்ளது.

இந்தத் திருமணம் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய பிறகே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர். இந்தக் குறித்து விசாரிப்பதற்காக பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி மற்றும் தாசில்தார் அந்தக் கிராமத்திற்குச் சென்று பார்த்த போது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் கூறுகையில், “சிறுவனின் தந்தை ஒரு குடிகாரர். அவன் தாய்தான் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு வீட்டை பாத்துக் கொள்ள யாரும் இல்லை என்ற கவலையுடன் இருந்தார். விவசாய கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தி வந்தார். அந்தக் குடும்பத்தில் இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் 14 வயதுடைய மூத்த மகனுக்குதான் தாய் திருமணம் ஏற்பாடு செய்தார். கர்நாடகாவில் உள்ள தனது உறவினர்களின் மூலம் பெண் தேடினார்கள். இரு குடும்பத்தினரும் ஒத்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்னர் திருமணம் நடந்தது” என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தாசில்தார் ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “சட்டப்படி இந்தத் திருமணம் ரத்து செய்யப்படும். பெற்றோர்கள் மணப்பெண், மணமகனை மாவட்ட அதிகாரிகளிடம் இரண்டு நாட்களில் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்” என்றார். ஆனால், சிறுவனின் பெற்றோர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃபில் உள்ளதாக கூறப்படுகிறது.