இந்தியா

நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் இந்தியை திணிப்பதா? - மீண்டும் தமிழில் எழுதக் கோரிக்கை

kaleelrahman

புதுச்சேரியில் நடமாடும் இரத்த சேவை வங்கியாக செயல்பட்டு வந்த அரசு வாகனம் புதிப்பிப்பிற்காக சென்று வந்தபோது தமிழில் இருந்த விழிப்புணர்வு வாசகங்கள் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. உயிரைக்காக்கும் வாகனத்திலும் இந்தி திணிப்பா என ரத்த தான கொடையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு நலவழித்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடமாடும் அதிநவீன மொபைல் இரத்த தான பேருந்து செயல்பட்டு வருகின்றது. இந்த வாகனத்தின் மூலம் இரத்த கொடையாளர்கள் அமைப்புகள் தினமும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து இரத்தம் கொடையாக பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில், இந்த வாகனம் போக்குவரது துறை சான்றிதம் பெறுவற்காக வாகனத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ஹைதராபாத்தில் உள்ள அரசு பணிமனைக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட்டு புதுச்சேரி அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வந்தது.

வாகனம் புதுப்பிக்கப்பட்டு வந்ததை காணச் சென்ற இரத்தக் கொடையாளர்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் இந்த வாகனம் புதுப்பிப்பதற்கு முன்னாள் 'இரத்த தானம் செய்வீர் உயிரை காப்பீர்' என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தற்போது தமிழ் மொழியை முற்றிலும் நீக்கிவிட்டு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

உயிரைக்காக்கும் இரத்தம் கொடையாக வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரத்தியோக வாகனத்திலும் இந்தியை புகுத்துவதா என புதுச்சேரியில் இயங்கும் மிகப்பெரிய இரத்த தானம் வழங்கும் அமைப்பான உயிர்துளி இரத்தம் கொடை செய்யும் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

உயிரை கொடுக்கும் இரத்தம் கொடையிலும் இந்தியை புகுத்துவதை நிறுத்தி ஏற்கனவே இருந்ததை போலவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என உயிர்த்துளி அமைப்பு சார்பாக புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.