ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைசரன் பள்ளத்தாக்குக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கங்கள் மற்றும் பல தகவல்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சுற்றுலாபயணிகளின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடம் வெளியாகியுள்ளது .தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரைபடம் வரையப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கும்நிலையில், இந்த அமைப்பு மற்றும் தோற்றத்துடன் பொருந்தக்கூடிய எந்தவொரு சந்தேக நபர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து விசாரிக்கவும், அதற்கேற்ப பொருத்தமான தகவல்களைச் சேகரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த நிலையில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனம் ஸ்ரீநகரில் சிக்கியது.