மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூர் சமீபத்தில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், வங்காள விரிகுடாவின் கடலுக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தட்டுகளின் (புவித்தட்டுகள்) இயக்கம், அதிக அளவிலான வண்டல் படிவுகள் மற்றும் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் பழமையான புவியியல் பிளவுகள் மீண்டும் செயல்படத்தொடங்குதல் ஆகியவற்றின் காரணமாக வளைகுடா பகுதிகளில் மிதமானது முதல் தீவிரமானது வரையிலான நிலநடுக்கங்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை வெறும் கணிப்பு மட்டுமல்ல என்பதற்கு, கடந்த காலங்களில் பதிவான நில அதிர்வுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் ஒடிசாவின் பாரதீப், ஜகத்சிங்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் சுமார் 8 முதல் 10 முறை லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜகத்சிங்பூர், பாரதீப், கேந்திரபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் உணரப்பட்டது. இதில் சுமார் 200 பேர் காயமடைந்ததனர். அதேபோல், கடந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகளும் ஒடிசாவின் பல கடலோர மாவட்டங்களில் உணரப்பட்டன.
அதேபோல, பாரதீப் மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய இரு நகரங்கள் நிலநடுக்கத்தால் மிதமான பாதிப்பு ஏற்படக்கூடிய நிலநடுக்க மண்டலம் (Seismic Zone III) பகுதியில் உள்ள நிலையில், தீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பாக பல அடுக்குமாடிக் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தச்சூழலில் தான், நிலநடுக்கத்தைத் தடுக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்தை குறைக்க முடியும் என்பதால், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான கட்டுமான விதிகளை கடுமையாக அமல்படுத்துவதுடன், பழைய மற்றும் ஆபத்தான கட்டிடங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இந்த ஆய்வு வலியுறுத்தியிருக்கிறது.
எனினும், எப்போது நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என்றும், இந்த ஆய்வு உடனடி நிலநடுக்கம் ஏற்படும் என்ற எச்சரிக்கை அல்ல என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.