மோடி, நிதி திவாரி எக்ஸ் தளம்
இந்தியா

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நியமனம்.. யார் இந்த நிதி திவாரி?

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய தனிச் செயலாளராக இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நியமனம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 29 தேதியிட்ட உத்தரவின்படி, திவாரி தனது தற்போதைய பதவியில் இருந்து பிரதமர் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். அவரது பதவிக்காலம் தற்போதைய நிர்வாகத்தின் காலத்துடன் அல்லது மேலும் உத்தரவுகள் வழங்கப்படும் வரை இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே விவேக் குமார் மற்றும் ஹார்திக் சதீஷ்சந்திர ஷா என இரண்டு தனிச் செயலாளர்கள் உள்ளனர்.

யார் இந்த நிதி திவாரி?

2014ஆம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான நிதி திவாரி, பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் மஹ்மூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். 2013ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 96வது இடத்தைப் பிடித்த அவர், இந்திய வெளியுறவுப் பணியில் சேருவதற்கு முன்பு வாரணாசியில் உதவி ஆணையராகப் பணியாற்றினார். 2022ஆம் ஆண்டு துணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜனவரி 6, 2023 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் (தற்போது பிரதமரின் தனிச் செயலாளராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது). பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றினார். சர்வதேச உறவுகளில் அவரது நிபுணத்துவம் பிரதமர் அலுவலகத்தில், குறிப்பாக வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு நேரடியாக அறிக்கை அளித்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், சிறந்த அதிகாரி பயிற்சியாளருக்கான தூதர் பிமல் சன்யால் நினைவு பதக்கமும், சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.