பாஜக எம்பி அஜய் பட் web
இந்தியா

திருமணம் ஆகவில்லையா..? ’ஜெய் ஸ்ரீராம்’ என சொன்னால் போதும்..! - பாஜக எம்பி பேச்சு

திருமணம் ஆகவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என சொல்லுங்கள் என்று பாஜக எம்பி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

PT WEB

உத்தரகண்ட் பாஜக எம்பி அஜய் பட், திருமண பிரச்சினைகளுக்கு 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லுங்கள் என பரிந்துரைத்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆன்மீக நம்பிக்கையையும் சமூக பிரச்சினைகளையும் இணைத்து பேசுவதால், பலரின் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

திருமணம் ஆகவில்லை என்றால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் பட் பேசியது, தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அஜய் பட்

அந்தக் கூட்டத்தில் பேசிய அஜய் பட், ஆன்மீக நம்பிக்கையையும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையும் இணைத்துப் பேசினார். “ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலோ, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை இல்லையெனிலோ அல்லது பசு மாடு பால் தரவில்லை என்றாலோ…‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்று அவர் கூறியது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பேச்சு வெளியான உடனேயே, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அறிவியல் ரீதியாகவும், சமூக அடிப்படையிலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு இதுபோன்ற ஆன்மீக தீர்வுகளை முன்வைப்பது தவறான அணுகுமுறை என எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முக்கியமாக, திருமணம், குடும்ப உறவு, விவசாயம் போன்ற நுணுக்கமான சமூகப் பிரச்சினைகளை மத நம்பிக்கையுடன் மட்டும் இணைத்து பேசுவது, மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது பொது மக்களிடையே தவறான புரிதல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ajay bhatt

அதே நேரத்தில், அஜய் பட்டின் ஆதரவாளர்கள் இந்த விமர்சனங்களை மறுத்துள்ளனர். இது இறைநம்பிக்கை சார்ந்த ஒரு சாதாரண பேச்சு மட்டுமே என்றும், மக்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் இப்படிக் கூறியதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

முன்னதாக, மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் அஜய் பட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது இந்த உரை அரசியல் தலைவர்கள் பேசும் வார்த்தைகளின் பொறுப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைமையகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனமாக கண்காணித்து வருகின்றன.