ICICI BANK | இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் ஒன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும், அப்போதிலிருந்து தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறியுள்ளது. அதன்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக சேமிக்குகணக்கு தொடங்கினால் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயையும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயையும் இருப்புத்தொகையாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இருப்புத்தொகை குறைவாக உள்ளவர்களுக்கு 6 சதவீதம் அல்லது 500ரூபாய், இதில் எது குறைவாக இருக்கிறதோ அதை அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் 3 பண பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய கட்டணமாக 150 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு 3 ரூபாய் 50 காசுகள், இதில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி இப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகையை உயர்த்தியது மத்திய அரசின் அனைவருக்கும் வங்கி சேவை நோக்கத்திற்கு எதிரானது என வங்கி வாடிக்கையாளர்களுக்கான பொதுநல அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பு மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ICICI வங்கியின் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும் என்றும் வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.