பிரபல முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் (IBM), வெறும் 42 நாட்களில் தனது சந்தை மதிப்பில் (Market Capitalization) 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை (இந்திய மதிப்பில் சுமார் ₹8.3 லட்சம் கோடிக்கும் மேல்) இழந்துள்ளது.
கடந்த ஜூன் 2 அன்று ஐபிஎம் நிறுவனத்தின் பங்குகள் மிக உயர்ந்த உச்சத்தில் இருந்தன. ஆனால், அடுத்த 42 நாட்களில், அதாவது ஜூலை 14 அன்று, நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. அன்று ஒரே நாளில் மட்டும், ஐபிஎம் பங்குகள் 25% வரை சரிந்தன. இதையடுத்து, ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) அரவிந்த் கிருஷ்ணா (Arvind Krishna), முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் நிறுவனத்தின் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப பட்ஜெட்டை மாற்றியமைத்து வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள், ஐபிஎம்மின் பாரம்பரிய மென்பொருட்கள் (Software) மற்றும் மெயின்பிரேம் (Mainframe) கணினிச் சேவைகளுக்குச் செலவிடுவதைக் குறைத்துக்கொண்டு, ஏஐ சர்வர்கள் (AI Servers), ஸ்டோரேஜ் அமைப்புகள் மற்றும் மெமரி சிப்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. விலையேற்றத்திற்கு முன்பாகவே இந்த ஏஐ ஹார்டுவேர்களை வாங்கிவிட நிறுவனங்கள் போட்டியிட்டதால் ஐபிஎம்மின் மென்பொருள் வணிகம் பாதிக்கப்பட்டது. இதுவே ஐபிஎம்மின் சரிவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎம் நிறுவனத்தின் இந்த வீழ்ச்சி, இதர நிறுவனங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், ஏஐ யுகத்தின் அசுர வேகத்திற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் மாறாவிட்டால், பெரிய இழப்பைச் சந்திக்கும் என்பதை இது காட்டுகிறது.