இந்தியா

நிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக நின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் ராஜினாமா!

webteam

கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தில் மக்களோடு மக்களாக களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தாதர் - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு, செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாள்களாக இருந்தார். 

9 வது நாளில் பிற அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, இந்த தகவல் வெளியுலகத்துக்கு தெரியவந்து கண்ணன் கோபிநாதன் பிரபலமடைந்தார். இந்நிலையில், அவர் தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ‌தனது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும்வரை தனது பணியை மேற்கொள்ள இருப்பதாக கண்ணன் கோபிநாதன் கூறியுள்ளார்