இந்தியா

"டெல்லிக்கு போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்கிறேன்" : கெஜ்ரிவால்

Veeramani

டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காலைக்குள் ஆக்சிஜன் அளிக்கப்படாவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சில மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்கும்படி மத்திய அரசை கடந்த 7 நாட்களாக வலியுறுத்தி வருவதாகவும் மனீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அனுப்பிய செய்தியில் ‘500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் ஜிடிபி மருத்துவமனையில் ஆக்சிஜன் 4 மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது’ என கூறியிருந்தார். டெல்லியில் நேற்று ஒரே நாளில் 28,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.