இந்தியா

’என் உடல் பற்றி அப்படி சொல்லலாமா?’ சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வசுந்தரா ராஜே கோரிக்கை!

’என் உடல் பற்றி அப்படி சொல்லலாமா?’ சரத் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வசுந்தரா ராஜே கோரிக்கை!

webteam

என் உடல் பற்றி தவறாக பேசிய சரத் யாதவ், பெண்களையே அவமதித்துள்ளார் என்றும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்த, மாநில முதலமைச்சரும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், என் உடல் பற்றி பேசியிருக்கிறார். இதன் மூலம் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்.

மொத்த பெண்களையுமே அவர் அவமானப்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். எந்த தலைவருக்கு எதிராகவும் நாங்கள் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதில்லை. அது நாகரிமானதும் அல்ல. வருங்காலத்தில் யாரும் இப்படி பேசாமல் இருக்க வேண்டியது அவசியம். அதற்காக தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய சரத் யாதவ், ‘வசுந்தரா ராஜேவுக்கு இப்போது உடல் எடை கூடிவிட்டது. இதற்கு முன்பு ஒல்லியாக இருந்தார். இப்போது சோர்வாகக் காணப்படுகிறார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர் எங்கள் மத்திய பிரதேசத்து மகள்’ என்று கூறியிருந்தார். இப்படி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, தேர்தல் கமிஷனில் சரத் யாதவ் மீது புகார் செய்திருந்தது.

இந்நிலையில் வசுந்தரா ராஜே புகாருக்கு சரத் யாதவ் அளித்த பதிலில், ’நான் நகைச்சுவைக்காக அப்படி குறிப்பிட்டேன். அவரை முன்பும் இப்போதும் என ஒப்பிட்டுக் பேசினேன். இது அவர் கண்ணியத்தை குறைப்பதாகவோ அவமானப்படுத்துவதாகவோ ஆகாது’ என்று தெரிவித்துள்ளார்