இந்தியா

'நான் ராஜா இல்ல' - நிவாரணம் கேட்டவரிடம் விரக்தியில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

kaleelrahman

''நான் ஒன்னும் ராஜா கிடையாது; எனக்கு மேலும் கீழும் மந்திரிகள் உள்ளனர்'' என மழை நிவாரணம் கேட்ட நபரிடம் விரக்தியாக பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமியின் ஆடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரில் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, அதிகளவு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்தனர்.

இந்நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி, அறிவித்தார். ஆனால் அந்த தொகை இன்னும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் காரைக்காலைச் சேர்ந்த ஒருவர், புதுவை முதல்வர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

அப்போது மழை நிவாரணம் எப்போது ஐயா கிடைக்கும் என கேள்வி எழுப்புகிறார்? அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, ''நான் மட்டும் ராஜாவாக இருந்தால் பரவாயில்லை. நான் ராஜா கிடையாது. எனக்கு மேலும் கீழும் மந்திரிகள் இருக்கிறார்கள். இது பாண்டிச்சேரி அப்படித்தான் இருக்கும்'' என மிகவும் விரக்தியாக கூறுகிறார். முதல்வர் பேசிய இந்த ஆடியோ புதுச்சேரி மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது.