இந்தியா

மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கும்பல் - பெண்ணின் புகாரில் அதிர்ந்து போன கேரள மாநிலம்

கலிலுல்லா

கேரளாவில் மனைவிகளை மாற்றி உறவு கொள்ளும் கும்பல் செயல்படுவது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8ம் தேதி கேரளாவின் கோட்டயம் காவல்நிலையத்தில் 26வயதான பெண் ஒருவர் புகார் அளித்தார். அவர் அளிந்த அந்த புகார், அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ''கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நபர்களுடன் சட்ட விரோத உறவு கொள்ளும்படி தன் கணவர் தன்னை தூண்டுகிறார்'' என அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், மனைவியை பரஸ்பரம் மாற்றிகொள்ளும் கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் 25 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மனைவியை மாற்றிக்கொள்ளும் கும்பல்:

கேரளாவில் பரஸ்பரம் மனைவியரை மாற்றிக்கொள்ளும் கும்பல்கள் குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அதில் மனைவியை பரஸ்பரம் மாற்றி உறவு கொள்ளும் கும்பல் செயல்பட்டு வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். சில பெண்கள் விருப்பத்துடன் இதில் ஈடுபட்டாலும், பலர் வற்புறுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில், இதை ஒரு தொழிலாக மாற்றி பணம் புழங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்'' என தெரிவித்துள்ளனர். மேலும், இதில் முக்கிய புள்ளிகள் சிலரின் பெயர்களும் அடிபடுவதாக கூறப்படுகிறது. கேரளாவின் செய்தி நிறுவனமான மாத்ரபூமியின் அளித்துள்ள தகவலின்படி, சமூக ஊடகங்களை பயன்படுத்தி இந்த கும்பல்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி சம்மதம் பெறுவதாகவும், பணம் கைமாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.