இந்தியா

இன்று கரையை தொடும் 'அசானி' புயல் - காக்கிநாடாவில் கொட்டும் கனமழை

JustinDurai

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள அதிதீவிரப் புயல் அசானி இன்று காலை காக்கிநாடா அருகே வந்து, பின்னர் திசைமாறி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.30 மணியளவில் காக்கிநாடாவுக்கு தெற்கே 170 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நிலைக் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வரும் நிலையில், இன்று காலை காக்கிநாடா அருகே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 105 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காக்கிநாடா மாவட்டத்தில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. காக்கிநாடாவை தொடும் புயல், பின்னர் திசைமாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: சென்னையை குளிர்விக்கும் கோடை மழை! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி