Vande Bharat Express
Vande Bharat Express  ANI twittr page
இந்தியா

வந்தே பாரத் ரயில் பயணிக்கு வழங்கிய உணவில் ’நகம்’... வைரலான வீடியோ! நடவடிக்கை எடுத்த IRCTC!

Prakash J

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக விளங்கும் இந்த ரயில் சென்னை, பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சேவையில், இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னைக்கு (சென்னை – மைசூரு, சென்னை – கோவை) இரண்டு ரயில்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரயில்வே அளிக்கும் உணவின் தரத்தால் பாதிக்கப்பட்டதாகப் பலரும் தங்களின் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

இதுகுறித்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது. மேலும் இதுகுறித்து ஐஆர்சிடிசி, "ரயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரயிலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

Vande Bharat Express

முன்னதாக இதே ரயிலில் கடந்த ஜூன் 27ஆம் தேதி பயணம் செய்த பயணி ஒருவர், மதிய உணவின்போது ஆணிகளை எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. அன்றைய தேதியிலேயே வேறு சில பயணிகளும் சில உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.